சாரங்கபாணி சுவாமி கோயில்|| திருக்குடந்தை|| கும்பகோணம்

Mar 31 2025

 சாரங்கபாணி சுவாமி கோயில்|| திருக்குடந்தை|| கும்பகோணம்



 



 



சாரங்கபாணி சுவாமி கோயில் (EnglishSarangapani Temple) அல்லது திருக்குடந்தை என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம்திருப்பதிக்கு அடுத்ததாகப் போற்றப்படுகிறது. சோழ நாட்டு பன்னிரெண்டாவது திருத்தலம் ஆகும். இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் மூலவராக ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் இக்கோயில் விளங்குகின்றது.



கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்‌கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக்கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பாகும். சோழர்களால் கட்டப்பட்டது. இக்கோவிலின் கலைநயம் மிகுந்த சிற்பங்கள், தூண்கள் கொண்ட மண்டபங்கள் மற்றும் கோபுரங்கள் ஆகியவை தஞ்சை நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டவையாகும்.



புராணம்



 



இந்து புராணத்தின் படி, பொற்றாமரை குளத்தின் கரையில் தவம் செய்த ஹேமரிஷி என்ற முனிவருக்காக இந்துக் கடவுளான விஷ்ணுவின் அவதாரமான வைணவ தெய்வம் சாரங்கபாணி தோன்றினார். ஒருமுறை, பிருகு முனிவர், விஷ்ணுவை அவரது இருப்பிடமான பாற்கடலில், சந்திக்க விரும்பினார். முனிவரால் விஷ்ணுவின் கவனத்தை ஈர்க்க இயலவில்லை. அதனால் ஏற்பட்ட கோபத்தில், முனிவர், விஷ்ணுவை மார்பில் உதைத்தார். ஆனால், விஷ்ணு, கோபத்தைக் காட்டாமல் அமைதியாக இருந்தார். இதனால், விஷ்ணுவின் மார்பில் வசிக்கும் மகாலட்சுமி கோபமடைந்தார். அவர் வைகுண்டத்தை விட்டு பூமியை அடைந்து பத்மாவதி வடிவத்தை எடுத்தார். விஷ்ணு அவரைப் பின்தொடர்ந்து அவளை மணந்தார். பத்மாவதிக்கு பழைய நினைவுகள் திரும்பின. அதனால், மீண்டும் விஷ்ணுவிடம் கோபம் ஏற்பட்டது. மகாலட்சுமியின் கோபத்தைத் தவிர்க்க, விஷ்ணு கோயிலின் நிலத்தடி அறையில் பாதாள சீனிவாசராக வசித்து வந்தார். இதற்கிடையில், பிருகு முனிவர் விஷ்ணுவிடம் மன்னிப்பு கோரினார். மற்றும் மகாலட்சுமியை தனது அடுத்த பிறவியில், தனது மகள் கோமளவல்லியாக பிறக்கும்படி கேட்டுக்கொண்டார்.



அடுத்த பிறவியில், முனிவர் ஹேமரிஷியாகப் பிறந்தார். மகாலட்சுமியைத் தனது மகளாக அடைய தவம் செய்தார்.[3] விஷ்ணு முனிவரின் தவத்தால் மகிழ்ச்சி அடைந்தார், மேலும், அவரின் விருப்பத்திற்கிணங்க, மகாலட்சுமியை மகளாகப் பெற வரமளித்தார். இதனால், மகாலட்சுமி ஆயிரம் தாமரைகள் பூத்திருந்த பொற்றாமரைக் குளத்திலிருந்து வெளிவந்தார். இதனால் கோமளவல்லி (தாமரையிலிருந்து தோன்றியவர்) என்று பெயரிடப்பட்டார். விஷ்ணு தனது தங்குமிடமான வைகுண்டத்திலிருந்து குதிரைகள் மற்றும் யானைகள் பூட்டப்பட்ட தேரில் ஆரவாமுதனாக பூமிக்கு இறங்கினார்.[4] மகாலட்சுமியை சமாதானப்படுத்தி, அவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக, விஷ்ணு, அருகிலுள்ள சோமேஸ்வரர் கோவிலில் தங்கியிருந்தார். இறுதியில், மகாலட்சுமியின் கோபம் தணிந்ததால், இவர்களின் திருமணம் இனிதே நடந்தது.[5] சாரங்கபாணி ("கையில் வில் வைத்திருப்பவர்") என்ற பெயர் சமசுகிருத வார்த்தையான சாரங்கத்தில் இருந்து உருவானது. சாரங்கம் என்றால் விஷ்ணுவின் வில் என்றும், பாணி என்றால் கை என்றும் பொருள் ஆகிறது.[6]



கோயிலின் கலைநயம்



கும்பகோணத்தில் உள்ள மிகப்பெரிய விஷ்ணு கோயிலாக சரங்கபாணி சுவாமி கோயில் உள்ளது. பொ.ஊ. 14 ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் மன்னர் விருப்ண்ண உடையாரால் கட்டப்பட்ட நகரத்தில் மிக உயரமான கோயில் கோபுரத்தைக் கொண்டுள்ளது. இந்த கோயில் ஒரு பெரிய வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது. பொற்றாமரைக் குளத்தைத் தவிர கோயிலின் அனைத்து நீர்நிலைகளையும் இந்த வளாகம் கொண்டுள்ளது. கோயிலின் இராஜகோபுரம் (பிரதான நுழைவாயில்) பதினொரு அடுக்குகளைக் கொண்டுள்ளது. மேலும், இது, 173 அடி (53 மீ) உயரம் கொண்டது. கோயிலில் மேலும் ஐந்து சிறிய கோபுரங்கள் உள்ளன. இராஜகோபுரத்தில் பல்வேறு மதக் கதைகளை சித்தரிக்கும் புள்ளிவிவரங்கள் உள்ளன. இந்த கோயில் கிழக்கு திசை நோக்கி உள்ளது; மற்றும் பொற்றாமரைக் குளம் மேற்கு நுழைவாயிலுக்கு வெளியே அமைந்துள்ளது.



தனிச்சிறப்பு



[தொகு]



கோயிலின் மைய ஆலயம் குதிரைகள் மற்றும் யானைகளால் வரையப்பட்ட தேரின் வடிவத்தில் உள்ளது. இது, இருபுறமும் திறப்புகளுடன், தேரில் சொர்க்கத்தில் இருந்து சாரங்கபாணி இறங்குவதைக் காட்டுகிறது.[2] கோயிலின் மேற்கு பகுதியில் ஹேமரிஷி முனிவரின் சிற்ப பிரதிநிதித்துவம் உள்ளது.[7] மத்திய ஆலயம் எனப்படும் கருவறை, 100 தூண்கள் கொண்ட மண்டபம் வழியாக அணுகப்படுகிறது. தேரின் வடிவத்தில் உள்ள உள் கருவறை வெளிப்புற நுழைவாயிலை எதிர்கொள்ளும் துவார பாலகர்களால் பாதுகாக்கப்படுகிறது. வெளிப்புற நுழைவாயிலிலிருந்து, கருவறைக்கு ஒரு துளையிடப்பட்ட சாளர மையம் உள்ளது.[3]



கோயிலின் மைய ஆலயத்தில், சாரங்கபாணியின் உருவம் பள்ளிகொண்ட தோரணையில் உள்ளது. இங்கு, சாரங்கபாணி, தலையை தனது வலது கையில் வைத்தவாறு, சயனத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். முனிவர் ஹேமரிஷி, லட்சுமி மற்றும் திருவிழா படங்கள் கருவறைக்குள் பொறிக்கப்பட்டுள்ளன. கருவறைக்கு உத்தராயண வாசல் மற்றும் தட்சினாயண வாசல் என பெயரிடப்பட்ட இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்திற்கு திறந்திருக்கும். ஜனவரி 15 முதல் ஜூலை 15 வரை, உத்தராயண வாசல் திறக்கப்படுகிறது. அதே போல, தட்சினாயண வாசல் ஆண்டின் பிற் பாதியில் திறக்கப்படுகிறது.



தேர் கோயில்



[தொகு]



பொற்றாமரைக் குளத்தில், ஹேமரிஷி மண்டபம் என்கிற மைய மண்டபம் உள்ளது.[5][8] இந்த கோவிலில் இராஜகோபுரத்திற்கு வெளியே, மரத்திலிருந்து செதுக்கப்பட்ட இரண்டு ஊர்வல ரதங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.[8] இது தேர்கோயில் என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இந்த தேர்கள், பண்டிகைகளின் போது கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.[9]



நாட்டிய முத்திரைகள்



[தொகு]



தென்னிந்திய நடன வடிவமான பரதநாட்டியத்தில் 108 கரணங்கள் அடிப்படை இயக்கங்களை உருவாக்குகின்றன. இவற்றில் சில கரணங்கள் கோயிலின் சுவர்களைச் சுற்றி செதுக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற சிற்பங்கள் தஞ்சாவூரில் உள்ள பிரிஹதீஸ்வரர் கோயிலிலும், சிதம்பரத்தில் நடராசர் கோவிலிலும் காணப்படுகின்றன. [10]



சார்ங்கபாணியா, சாரங்கபாணியா?



[தொகு]



சார்ங்கம் என்ற சொல் திருமாலின் வில்லுக்குரிய சிறப்புப்பெயர். இனியதோர் 'சார்ங்கம் மால்வில்' எனச் சூடாமணி நிகண்டும், 'சார்ங்கம் விண்டுவில்' என நாமதீப நிகண்டும் தெளிவாக்குகின்றன. பாணி என்பது கரத்தில் ஏந்தியவன் எனப் பொருள் தரும். எனவே சார்ங்கபாணி என்பதற்குச் சார்ங்கம் என்னும் தெய்வீக வில்லை ஏந்தியவன் என்பது பொருள். சாரங்கம் என்பது பல பொருள்களை உடைய ஒரு சொல். 'சாரங்கம் மானும் வண்டும் சாதகப் புள்ளும் ஆமே' என்பது சூடாமணி. சாரங்கபாணி என்றால் மானை ஏந்திய சிவபெருமான் எனக் கொள்ளலாம். இத்தொடர் நேராகத் திருமாலைக்குறிக்காது. பொதுமக்கள் இவ்வேற்றுமையை உணராமல் சாரங்கபாணி எனத் திருமாலை வழங்கத் தொடங்கிவிட்டனர். சார்ங்கபாணி என்னும் பெயர் உச்சரிக்க எளிமையாக இல்லாததே இதற்குக் காரணம். உலக வழக்கு இப்படி மாறிய உடனே நிகண்டு ஆசிரியர்களும் சாரங்கபாணி என்ற சொல்லுக்கே திருமால் எனக் கூறிவிட்டனர். பொ.ஊ. 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய பாரதிதீப நிகண்டிலேயே 'விண்டுநராந்தகன் சாரங்கபாணியன் வெற்பெடுத்தோன்' என இப்பெயர் இடம்பெற்றுவிட்டது. பின்னால் வந்த அகராதிகளில் எல்லாம் சாரங்கம் என்ற சொல்லிற்குத் திருமாலின் வில் என்ற பொருள் ஏறிவிட்டது. இலக்கியத்தில் பேச்சு மொழியின் செல்வாக்கிற்கு இது ஒரு சிறந்த உதாரணம் ஆகும். [11]



கும்பகோணம் பெயர்



[தொகு]



இக்கோயிலின் கலைநயத்துடன் அமைக்க பட்டுள்ள மண்டபங்கள் இராஜகோபுரம் விஜயநகர பேரரசின் மன்னர் விருப்பண்ண உடையாரால் கட்டப்பட்டது . இக்கல்வெட்டின் காலம் பொ.ஊ. 1385 ஐப்பசி மாதம் 27ஆம் தேதி புதன்கிழமை ஆகும். இக்கல்வெட்டில்தான் இவ்வூரின் பெயர் கும்பகோணம் என்று முதன்முதலாக வருகின்றது.[12]



மூலவர், தாயார்



[தொகு]



இங்குள்ள மூலவர் சார்ங்கபாணி, ஆராவமுதன் எனப்படுகின்றார். உற்சவர் நான்கு திருக்கைகளுடன் சங்கு, சக்கரம், கதை, சார்ங்கம் என்ற வில், உடைவாள் ஆகிய ஐந்து திவ்ய ஆயுதங்களுடன் வலது திருக்கை அபயமளிக்கும் முத்திரையுடன் கைம்பொன் சுடராக திகட்டாத திண்ணமுமே என்னும்படி வேறு எந்த தலத்திலும் காணக்கிடைக்காத அழகுடன் காட்சியளிக்கிறார். சார்ங்கம் என்ற வில்லைக் கொண்டுள்ளதால் சார்ங்கபாணி எனப்படுகிறார். தாயார் கோமளவல்லி.



பாடியோர்



[தொகு]



பன்னிரு ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இத்தலப் பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளனர். பெரியாழ்வார் இத்தலத்து இறைவனைப் பின்வருமாறு போற்றுகிறார்.











தூ நிலாமுற்றத்தே போந்துவிளையாட

வான் நிலா அம்புலீ! சந்திரா! வா என்று

நீ நிலா, நின் புகழாநின்ற ஆயர் தம்

கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி,

குடந்தைக் கிடந்தானே! சப்பாணி




திருவிழாக்கள்



தேர்த்திருவிழா



இக்கோயிலில் நடைபெறும் சித்திரைத் தேர்த்திருவிழா சிறப்புடையது. இதற்காக இந்தக் கோவிலின் பெரிய தேர் சித்தரை தேர் என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோயில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேராகும். இது திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையாக புகழ் பெற்றதாகும். இப்பெரிய மரத்தேரின் எடை 500 டன் ஆகும். இத்தேரின் அடிப்பாகம் 25 அடியாகவும், மேல்தட்டு 35 அடியாகவும், உயரம் 30 அடியாகவும் உள்ளது. இத்தேர் அலங்கரிக்கப்படும் போது 110 அடியாக இருக்கும்.



தமிழகத்தில் தேர் போன்ற அமைப்பில் பல கோயில்களில் உள்ள கருவறைகளோ, மண்டபங்களோ காட்சியளிக்கின்றன. அவற்றில் தாராசுரம், பழையாறை, திருக்கருக்காவூர், மேலக்கடம்பூர், கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களைக் கூறலாம்.



12 கருட சேவை



கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணிசக்கரபாணிஇராமஸ்வாமிராஜகோபாலஸ்வாமிவராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள்நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர். [13] [14]



பஞ்சரங்க தலங்கள


































கோவில் அமைவிடம்
ஸ்ரீரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீரங்கப்பட்டணம்
திருஅரங்கநாதசுவாமி திருக்கோவில் திருவரங்கம்
சாரங்கபாணி திருக்கோவில் கும்பகோணம்
கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோயில் திருப்பேர் நகர் என்ற கோவிலடி (திருச்சி)
பரிமள ரங்கநாதபெருமாள் திருக்கோவில் மயிலாடுதுறை


குடமுழுக்க



இக்கோயிலில் 1999இல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மகாமகத்தையொட்டி கும்பகோணத்திலிலுள்ள கோயில்களில் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில் இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் 10.7.2015இல் தொடங்கின.[15] 13.7.2015 காலை கும்பாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.[16]



 





  •