இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில் சென்றால் பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோயில் உள்ளது. கல்விக்குரிய தெய்வமாக கருதப்படும் சரசுவதிக்கு அமைக்கப்பட்டுள்ள தனிக்கோயிலாகவும் கருதப்படுகிறது.இக்கோயிலின் குடமுழுக்கு 2018 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியன்று நடைபெற்றது.ஆலயத்தில் சரசுவதி பூசை விழா ஒவ்வொரு வருடமும் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கமாகும்.
கோயிலின் முன்புறம் மூன்று நிலை ராசகோபுரத்தினைக் கொண்டுள்ளது. முன் மண்டபம் வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. அலங்கார மண்டபம் முகப்பில் அம்பாள் சுதை உள்ளது. கர்ப்பகிரக விமானம் கர்ண கூடுகள், அந்த்ராளம் உள்ள மாறுபட்ட விமானமாகும். இரண்டு பிற்காலக் கல்வெட்டுகள் மட்டும் உள்ளன. இத்தலத்தின் மூலவராக சரஸ்வதி காணப்படுகிறார். வெண்ணிற ஆடையில், வெண் தாமரையில் பத்மாசனத்தில், வலது கீழ் கையில் சின்முத்திரையும், இடக்கையில் புத்தகமும், வலது மேல்கையில் அட்சர மாலையும், இடது மேல்கையில் அமிர்தகலசமும் தாங்கி அமர்ந்திருக்கிறார்.
ஒட்டக் கூத்தன் எனும் தமிழ் கவிஞனுக்கு சரசுவதிதேவியின் அருள் கிடைக்கப் பெற்று, ஒட்டக்கூத்தன் வழிபட்டதால் கோயில் அமைந்துள்ள ஊர் கூத்தனூர் என பெயர் பெற்றது. கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை வழிபட நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிசேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார். ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரசுவதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.
பள்ளிக்குச் சேர்க்கும் முன்பாக குழந்தைகளை இங்கு அழைத்து வந்து ஆசி பெற்றுச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் தாம் தேர்ச்சி பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து தம் தேர்வு எண்களைக் கோயிலில் இங்குகுறித்து வைப்பதும் உண்டு. கலைமகள் தமக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாள் என்ற நம்பிக்கை இங்குள்ள பக்தர்களுக்கு உள்ளது.