சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள்... 

Apr 11 2025

 



சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள்... 



 மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மூவலூருக்கு வடக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் 'கோழிகுத்தி' எனும் கிராமத்தில் உள்ளது.



 



\"அத்திமர



அத்திமர வானமுட்டி பெருமாள்



Join Our Channel



0Comments



Share



காஞ்சிபுரத்தில் நாற்பது ஆண்டுகளுப்பின் தற்போது தரிசனம் தந்துகொண்டிருக்கிறார் அத்திவரதர். அத்திமரத்தினால் ஆன திருமேனி என்பதால் அந்த வரதராஜ பெருமாளுக்கு அத்திவரதர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அதேபோன்று, கோழிகுத்தி என்னும் இடத்தில் 800 ஆண்டுகள் பழைமையான வேரோடுகூடிய ஓர் அத்திமரத்தினால் ஆன பெருமாள் திருமேனி வழிபாட்டில் இருக்கிறது. மேலும் அந்த மரத்தின் வேர் பல இடங்களிலும் பரவியிருக்கிறது.



\"அத்திவரதர்\"



அத்திவரதர்



இத்தகைய சிறப்புகளையுடைய திருத்தலம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மூவலூருக்கு வடக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் 'கோழிகுத்தி' எனும் கிராமத்தில் உள்ளது.



 



இங்குதான் 'ஸ்ரீவானமுட்டி பெருமாள் கோயில்' இருக்கிறது. இந்தப் பெருமாள் 14 அடி உயரத்தில் விஸ்வரூப தரிசனம் அருள்கிறார். 'இவரைத் தரிசனம் செய்தால் திருப்பதி சீனிவாச பெருமாளையும், சோளிங்கர் யோக நரசிம்மரையும், காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாகத் தரிசித்த பலன் கிடைக்கும்' என்கிறார்கள் பக்தர்கள்.



\"வானமுட்டி



வானமுட்டி பெருமாள் கோயில்



'கோடிஹத்தி' எனும் பெயர்தான் மருவி 'கோழிகுத்தி' என்றாகிவிட்டது என்கிறார்கள். ‘சாபவிமோசனபுரம்’ என்பதுதான் கோடிஹத்தியின் பூர்வ பெயர். சமஸ்கிருதத்தில் ‘ஹத்தி’ என்றால் கொலை என்று பொருள். பிப்பலர் என்ற மகரிஷி மாபெரும் தவசீலர். இறை பக்தியில் எந்தக் குறையும் வைக்காமல் எந்த நேரமும் இறைவனை வணங்கி வந்தார். பிப்பலர் தன்னை நாடிவந்த அன்பர்கள் பலருக்கும் நல்வழி காட்டி ஆசி வழங்கிவந்தார்.



ஒரு முறை சரும நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த பிப்பலர், ‘‘பரந்தாமா... பார்த்திபா...! இறைப் பணியில் இயன்ற அளவு ஈடுபட்டு என்னையே உனக்கு அர்ப்பணித்திருக்கிறேன். என் பக்தியில் என்ன குறை கண்டாய் நீ? எனக்கு ஏன் இப்படி ஒரு வேதனை? சருமத்தில் சோதனை? இதற்குத் தீர்வு கிடையாதா?’’ என்று மன்றாடினார்.



\"வானமுட்டி



வானமுட்டி பெருமாள் கோயில்



அன்று இரவு பிப்பலரது கனவில் காட்சி தந்த எம்பெருமான், ‘‘பிப்பலரே... போன ஜென்மத்தில் நீர் அரசனாக இருந்து ஹத்தி (கொலை) செய்திருக்கிறாய். அதன் பலனாகத்தான் இந்த சரும நோய், உன் உடலில் தங்கி வேதனை அளிக்கிறது. அந்தப் பாவ தோஷம் நீங்க வேண்டுமானால், காவிரிக் கரையோரம் உன் யாத்திரையைத் தொடங்கு. மூவலூரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரர் உனக்கு வழி காட்டுவார். அதன் பின் சரும நோய் நீங்கிப் பொன் உடல் பெறுவாய் நீ!’’ என்று அருளிவிட்டு மறைந்தார்.



அதன்படி காவிரிக் கரையோரம் தனது யாத்திரையைத் தொடங்கிய பிப்பலர், வழியில் உள்ள தலங்களை எல்லாம் தரிசித்து உளமார வழிபட்டு மூவலூரை அடைந்தார். மூவலூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரரை உருக்கமாக வழிபட்டார். மனம் மகிழ்ந்த ஈஸ்வரன், ‘‘பிப்பலரே... வடக்கு நோக்கிச் செல்... உன் வாட்டம் தீரும்!’’ என்றார். பிப்பலரும் அப்படியே வடக்கு நோக்கிச் சென்று காவிரி நதியில் பகவானைப் பிரார்த்தித்தபடி நீராடினார்.



\"பெருமாள்



பெருமாள் கோயில் குளம்



ஏதோ ஓர் உள்ளுணர்வு உந்த, அவர் கால்கள் நடக்கத் தொடங்கின. சிறிது தொலைவில் உயர்ந்து வளர்ந்திருந்த ஓர் அத்தி மரம் அவர் கவனத்தைக் கவர்ந்தது. மரத்தை நெருங்கினார். அப்போது அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. விஸ்வரூபமான தன் உருவத்தைக் காட்டி நான்கு கைகளுடன் ஸ்ரீமந் நாராயணன் சங்கு சக்கர கதாதரணாக அபயஹஸ்தம் காட்டி வானளாவ உயர்ந்து நின்று பிப்பலருக்கு காட்சி அளித்தார். உடனே, பிப்பலரின் உடலில் இருந்த சரும வியாதி முற்றிலுமாக மறைந்தது.



Also Read



 



\"பக்தர்களை



பக்தர்களை ஈர்க்கும் அத்திவரதர் பொம்மைகள்... மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் பொம்மைக்காரத் தெரு!



 



அவர் உடல் தங்கமயமாக ஜொலித்தது. சரும நோயிலிருந்து விடுபட்ட பிப்பலர், பின்னர் காவிரிக் கரையிலேயே, ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து தவத்தில் ஈடுபட்டார். இதையொட்டி ஓடும் காவிரி தீர்த்தத்தைப் 'பிப்பல மகரிஷி தீர்த்தம்' என்று அழைக்கிறார்கள். இங்கு நீராடினால், ஸ்ரீவானமுட்டிப் பெருமாளின் அருளால் மூழ்குபவரின் மெய்ப் பிணி, பாவப் பிணி, பிறவிப் பிணி ஆகிய மூன்றும் நீங்கும் என்கிறார்கள்.



\"அத்திமர



அத்திமர வானமுட்டி பெருமாள்



பிற்காலத்தில் இந்தத் தலத்தின் மகிமையை அறிந்த அரசர் ஒருவர், தான் போர்மூலம் புரிந்த கொலைப் பாவத்தைப் போக்க 48 நாள்கள் பிப்பல தீர்த்தத்தில் நீராடி தவம் இருந்து வழிபட்டார். அப்போதும் அந்த அரசருக்குக் காட்சிதந்தார் ஸ்ரீ வானமுட்டி பெருமாள். மெய் சிலிர்த்த அரசன் தேர்ந்த சிற்பிகளைக் கொண்டு பகவான் காட்சிதந்த அத்திமரத்தில் பெருமாளின் உருவத்தைச் செய்யச் சொல்லி கோயில் எழுப்பி வழிபட்டான். பெருமாள் காட்சி தந்த இடத்துக்கு முன்னால் உள்ள குளம், ‘விஸ்வரூப புஷ்கரணி’ என்று அழைக்கப்படுகிறது.



இங்கு, பெருமாளுக்கு இடப் பக்கத்தில் பூதேவித் தாயாரின் சிறு விக்கிரகம் உள்ளது. தாயாருக்கெனத் தனி சந்நிதி இல்லை. ஒரே ஒரு பிராகாரம்தான் இருக்கிறது. ஸ்ரீபிரகலாதனுக்கு அருள் செய்த ஸ்ரீநரசிம்ம மூர்த்திதான் இங்கே உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீயோக நரசிம்மர் இரண்டு கைகளில் சங்கு - சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார். இந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி எந்தவொரு கொடிய துன்பத்தையும் நொடியில் போக்கி அருள்பவர். கிரகக் கோளாறுகள், பகைவர்கள் தொல்லை, கடன் தொல்லை, வியாதிகளில் இருந்து விடுபட இவரை வழிபட்டால் நல்லது. பிரதோஷ காலத்தில் இந்த நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் அங்காரக தோஷம் நிவர்த்தியாகும். மன நிம்மதி ஏற்படும் என்கிறார்கள் பக்தர்கள்.



\"ஆஞ்சநேயர்\"



ஆஞ்சநேயர்



கோழிகுத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாள் அத்திமரத்தால் எழுந்தருளியிருப்பதால் கருவறையில் எந்தவித விளக்குகளும் ஏற்றப்படுவதில்லை. அபிஷேகங்கள் நடைபெறாது. இத்திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு ’சப்தஸ்வர ஆஞ்சநேயர்’ என்று பெயர். இந்தத் திருமேனியின் மீது 7 இடங்களில் தட்டினால் 'சரிகமபதநி' என்று சப்தஸ்வரங்களும் எழுகின்றன. மேலும் ஆஞ்சநேயர் வாலில் கட்டப்பட்டுள்ள மணியைத் தலைமீது தூக்கி வைத்துள்ளார். சப்தஸ்வர ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி தோஷம் விலகுமாம்.



தீராத தோல் வியாதிகள் நீங்க, சனி தோஷத்திலிருந்து விடுபட, வாழ்வில் செல்வ வளம்பெருக கோழிகுத்தி வானமுட்டி பெருமாளைத் தரிசிப்போம்...